ஒரு வகுப்பாசிரியை ஒரு நாள் முதலாம் வகுப்பில் கணக்குப்பாடம் நடத்திவந்தார். அப்பொழுது ஒரு சிறுவனைப்பார்த்து, "குமார்! உனக்கு நான் முதலில் ஒரு சாக்லேட் தருகிறேன். பின் உன் அப்பா இரண்டு சாக்லேட் தருகிறார் என்றால் உன்னிடம் மொத்தம் எத்தனை சாக்லேட் இருக்கும்?" என்று கேட்டார். சிறுவன் தயங்காமல் "நான்கு" என்று பதிலளித்தான்.
ஆசிரியைக்கு லேசான கோபம். "இதோ பார்! ஒழுங்காக எண்ணிச் சொல். உனக்கு நான் முதலில் ஒரு சாக்லேட் தருகிறேன். பின் உன் அப்பா இரண்டு தருகிறார் என்றால் மொத்தம் எத்தனை என்று சரியாகச் சொல். பார்ப்போம்?" திரும்பவும் சிறுவனிடம் இருந்து அதே பதில்தான். கேள்வியைச் சற்று மாற்றிப்போட்டுப் பார்ப்போம் என்று நினைத்த ஆசிரியை "உனக்கு நான் இரண்டு பழம் தருகிறேன். உன் அப்பா ஒரு பழம் தருகிறார். அப்படியென்றால், உன்னிடம் மொத்தம் எத்தனை பழம் இருக்கும். சொல் பார்ப்போம்." இப்பொழுது சிறுவன் சொன்னான் "மூன்று பழம்".
"உனக்குத் தான் சரியான விடை தெரிகிறதே! அப்படியிருக்க ஏன் முதலில் நான்கு என்று சொன்னாய்?" கோபமாகக்கேட்டார் ஆசிரியை. "என்னிடம் ஏற்கனவே ஒரு சாக்லேட் இருக்கிறது டீச்சர்." என்றான் குமார். ஆசிரியை திகைத்து நின்றார்.
ஆம். ஒவ்வொருவரின் செயல்பாடும், நடவடிக்கைகளும் முடிவுகளும் அவரவர் கோணத்தில் சரியானவை. நாம் முன்கூட்டியே ஒரு முடிவை எடுத்துக்கொண்டு பின் அதே அளவீட்டில் எல்லாவற்றையும் பார்க்கும்பொழுதுதான் சங்கடம் ஏற்படுகிறது. எந்தச் சிக்கலையும் அடுத்தவர் கோணத்தில் இருந்து பார்க்கத் தெரிந்தால் அதை விடுவிப்பது சுலபம். இதை ஆங்கிலத்தில் 'Empathy' என்ற சொல்லால் குறிப்பிடுவர். "Putting yourself in other person's shoes" என்று கூறுவதும் அதைத்தான்.
இது பிறருடன் நல்லவிதமான உறவை வளர்க்கவும், வாழ்வில் நிம்மதியைப் பெருக்கவும் உதவும். ஒரு நண்பரிடம் தொலைபேசியில் பேசவேண்டி அழைக்கிறீர்கள். அவர் இப்பொழுது பேசமுடியாது, அப்புறம் அழைக்கிறேன் என்று கூறிவிடுகிறார் என்று கொள்வோம். சிலர் 'என்ன ஆணவம். நான் வேலை மெனக்கெட்டு போன் செய்கிறேன். என்னை அலட்சியம் செய்கிறான்' என்று பொருமுவார்கள். சிலரோ 'பாவம் அவனுக்கு என்ன முக்கியமான வேலையோ! நான் வேறு இப்பொழுது தொந்தரவு செய்துவிட்டேன்.' என்று நினைப்பார்கள். இதில் யார் நல்ல நட்புகளையும் உறவுகளையும் பேணிக்காப்பவராக இருப்பார்? எவரது மனம் சலனமில்லாமல் நிம்மதியாக இருக்கும்? கண்டிப்பாக இரண்டாமவருடையதுதானே!
உறவுகளுக்கும் நட்புக்கும் மட்டுமல்ல 'Empathy'. நிர்வாகம் செய்பவர்களுக்கும், மேலாளர்களுக்கும்கூடத் தெரிந்திருக்க வேண்டிய வித்தை இது. தன் கீழ் பணிபுரிபவர் ஏதாவது தவறு செய்கையில், குடும்பச்சூழல், அவரது அறிவுத்திறன் இவற்றையும் மனத்தில் கொண்டு முடிவெடுத்தால் ஒரு விசுவாசமான ஊழியர் கிடைப்பார். அதே போல், முதலாளி ஒரு ஆத்திரத்தில் திட்டிவிட்டார் என வேலை செய்பவர் அவசரப்பட்டு வேலையை விட்டாலோ, இவரும் பதிலுக்குக் கூச்சல் போட்டு சண்டை போட்டாலோ என்ன ஆகும்?
நாம் பார்க்கும் கோணத்தை நமது மனநிலை, குணநலங்கள் இவை தீர்மானிக்கின்றன. நமது குணநலங்களையோ நமது வளர்ப்பு, சுற்றுச் சூழல் இவை தீர்மானிக்கின்றன. நம் கடந்த கால அனுபவங்கள், கற்றவை, கேள்விப்பட்டவை இவையும் நமது பார்வையைத் தீர்மானிக்கின்றன. இதை 'Seven habits of highly effective people' என்ற தமது நூலில் பிரபல எழுத்தாளர் ஸ்டீவன் கோவி அழகாக விளக்குவார்.
ஒரு ஓவியம் - ஒரு கோணத்தில் பார்த்தால் அசிங்கமான கிழவி போலவும், மறு கோணத்தில் அழகிய இளம்பெண் போலவும் தோன்றும் ஓவியம் அது. அதில் உள்ள கிழவி போல் ஒரு கோட்டோவியமும், அழகிய பெண் போன்ற கோட்டோவியமும் தயாரித்து இரு குழுவினரிடம் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டது. ஐந்து நிமிடங்கள் கழித்து அவர்களிடம் இந்த ஓவியத்தைக்காட்டி, இதில் என்ன தெரிகிறது என்று கேட்டாராம் அவர். இளம்பெண்ணின் கோட்டோவியத்தினைப் பார்த்த குழுவினர் கண்களில் இவ்வோவியத்திலும், இளம்பெண்ணே தோன்றியது. அதே போல், கிழவியைப் பார்த்தவர்கள் அந்த ஓவியத்தில் இருப்பது கிழவியே என்றார்கள். இரு குழுவினருக்கும் மத்தியில் பலத்த வாக்குவாதமே ஏற்பட்டுவிட்டது.
இரு தரப்பினரும் தாங்கள் சொல்வதே சரி என்றும் அடுத்தவர்கள் பார்வை தவறு என்றுமே வாதிட்டனர். பின் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் எண்ணம் மாறியது. பார்க்கும் கோணம் மாறியது. இரு தரப்பினரும் அடுத்தவர் கூறுவது உண்மைதான். அந்த ஒரே ஓவியம் ஒரு கோணத்தில் இளம்பெண்ணாகவும், ஒரு கோணத்தில் கிழவியாகவும் தெரிகிறது என்று உணர்ந்தனர்.
ஐந்து நிமிடம் பார்த்த ஒரு படம், நமது பார்வையில் இத்தனை வித்தியாசத்தை உருவாக்குகிறது என்றால் நாம் வளர்ந்த சூழல், பல வருடங்களாக நாம் பெற்ற அனுபவம் இவற்றால் ஏற்படும் தாக்கம் சாதாரணப்பட்டதா? அதை மீறி வேறு கோணத்தில் எந்தச் சிக்கலையும் பார்ப்பதும் அலசுவதும் மிகக்கடினம்தான். ஆனால் வாழ்க்கை என்பது கணக்குப்பாடமல்லவே- யார் போட்டாலும் ஒரே விடை வருவதற்கு?
எனவே, நமது கருத்துடன் பிறர் கருத்து ஒத்துப்போகவில்லை எனில் விவாதம் செய்ய வேண்டாம். கருத்துப்பரிமாற்றம் செய்யலாம், அது நம்மை ஆரோக்கியமாக வைக்கும். விவாதங்கள் மனக்கசப்பைத்தான் உண்டாக்கும். நமது உறவில் விரிசல்களை ஏற்படுத்தும். அடுத்தவர் சொல்வதிலும் அர்த்தம் இருக்கும் என்று நம்பவில்லையெனில் நமது வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடும். விவாதத்தில் வெற்றிபெற வாழ்க்கையை, நிம்மதியை இழப்பது முட்டாள்தனம்தானே!!!






