சிரித்துக் கொண்டிருந்த
ஐந்து அழகான பூக்களைத் தாங்கிய
செழித்த செடியொன்றின் வேராயிருந்து
இன்று
மீதமிருக்கும் வாடிப்போன
என் மூன்று பூக்களோடு வந்துநிற்கிறேன்
வீட்டு முற்றத்தில்.
இடிந்துபோய்க் கிடக்கிற
இந்த ஏழை கட்டிய
கல்வீட்டுக் குவியலுக்கு நடுவிலிருந்து கொண்டு
நானுங்களிடமொரு கேள்வி கேட்கிறேன்.
பதில் தெரிந்தால்
தயவுசெய்து சொல்லியனுப்புங்கள்.
எப்படிக் கட்டியெழுப்ப
மீண்டும் என் கனவுகளை?
கொப்பு முறிந்து
ஏராளம் காயம்பட்டும்
ஏதோ உயிரோடிருக்கிறது முற்றத்து மாமரம்.
எம் மனசுகளைப் போலவே.
இப்போதும் கதறிக்கொண்டேயிருக்கிறது
அணிற் பிள்ளை.
கீழேவிழுந்து சிதைந்து போய்க்கிடக்கும்
அதன் பஞ்சுக் கூட்டையும்
அதற்குள்ளே கருவாடாகிக் கிடக்கும்
கண்முழிக்கா தன் குஞ்சுகளையும்
பார்த்துப் பார்த்து.
ஊஞ்சலின் ஒரு கயிறறுந்து
பலகை அந்தரத்தில் தொங்குகிறது.
மீண்டும் முடிச்சுப்போட்டு கட்டிவிடலாம்.
ஆட இனி யாரிருக்கிறார்கள்?
சிதறுண்டு கிடக்கிற ஓட்டுத்துண்டுகளுக்கிடையே
நொருங்கிப் போயிருக்கிற
ஏராளம் பல்லிமுட்டைகளை சுமந்தபடி
வீடு
துப்பாக்கிரவைகளையும்...எறிகணைகளையும்
குடித்து விட்டு
அழுதுகொண்டு அலங்கோலமாக
படுத்துக் கிடக்கிறது.
முட்டைகள் கூழாகவும்
கோதுகளாகவுமிருக்கிற பெட்டிக்குள்
வேறெதையும் காணவில்லை.
அடைகிடந்த கோழியின்
ஒன்றிரென்டு இறகுகளைத் தவிர.
மீண்டும் அது திரும்பிவரக்கூடுமென
வீட்டில் எல்லோரும்
சொல்லிக்கொள்கிறார்கள்.
மேலே சுற்றிக்கொண்டேயிருக்கிறது
குறிவைத்த கண்களோடு பருந்தும்.
வண்ணத்துப்பூச்சிகளின் பறப்பும்
சிட்டுக்குருவிகளின் கீச்சிடலுமில்லா
பயங்கர மௌனம்
எப்போதும் சாகடிக்கப்படலாமெனும்
உண்மை நிறைந்த பீதியை
கிளப்பிவிட்டுக் கொண்டேயிருக்கிறது.
பருவப் பேனாவால்
மீசை முகவரி இடப்படாமல் கிடந்த
நானெழுதி வைத்திருந்த
என் இரண்டாவது திருமுகத்தை
பயங்கரவாத முத்திரையொட்டி
அவசரமாய் கட்டிக்கொண்டு போய்விட்டன
அதிகாரக் கயிறுகள்.
உடல்களிலும்... உயிர்களிலும்...
இடறுண்டு வந்த இறுதிநாளில்
போர் பிடுங்கிக்கொண்டு விட்ட
எம் கடைசிப்பூவின் ஞாபகமாய்
இப்போதும் காய்ந்து கொண்டிருக்கிறது.
அதிசயமாய் அறுபடாமலிருக்கும்
கிணற்றடிக் கொடிக்கயிற்றில்
அவளின் வெள்ளைச் சீருடை.
கட்டுக்கள் கட்டியபடியே இருக்க
கயிறுகளறுந்து கிடக்கின்றன.
மாடுகள் கட்டிய இடங்கள்.
இப்போ கூப்பிட்டாலும்
காணவே முடியவில்லை.
கடைசிவரைக்கும்
கலைக்க கலைக்க பின்னாலோடி வந்த
கறுப்பு ஊர் நாயை.
சிங்களப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்ற
சந்திக் கொத்துரொட்டிக் கடைக்கு
பின்னாலிருந்து
ஊர் முழுக்க கேட்கிறது
நாக்கிளிப்புளு போட்டு வளர்த்த
என் கழுத்துவெட்டிச் சேவல்களின்
உயிரலறுகிற கதறல்.
அவர்களின்
முடிவெட்டும் கடைக்கு முன்னே
போட்டிருக்கின்ற
முதிரை மேசையின் காலொன்றில்
இப்பொழுதும் அழியாமல் இருக்கிறது.
என் கடைசிப் பூ
அடுப்புக் கரியால் எழுதிவைத்த
“அப்பா” என்கின்ற ஒற்றைச் சொல்.
வெறும் பிரார்த்தனைகளை மட்டும்
நம்பியிருக்கிற காவலாளியாக
இரவுகளில் தூங்காமல் இருக்கிறேன்.
வெற்றிகளின் சிரிப்புடன்
சந்திகளில் கூடிநிற்கிற மூத்திரக்குளவிகள்
எப்போது வேண்டுமானாலும்
என் பூக்களை
முகர்ந்து பார்க்கிற முடிவுகளோடு
பறந்து வந்துவிடக் கூடுமென்பதால்.
ஒவ்வொரு முறை
கலைத்துக் கலைத்து போடும்போதும்
மீண்டும் மீண்டும்
தங்கள் வலைவீடுகளை
சலிக்காமல் கட்டிக்கொண்டிருந்த
சிலந்திப் பூச்சிகள் மட்டும்
இப்போ
மிகப் பிரமாண்டமாய் கட்டி வைத்திருக்கின்றன
தங்கள் வீடுகளை.
எந்தப் பயங்களுமற்ற பிறவிகளாய்.
----- ----- -----
தீபிகா.
07-07-10






