ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மேற் கொள்ளப்பட்ட/படும் "சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு அதின் மூலம் உயிர் நீத்த பெருமை திலீபனையே சாரும்.
இவரது போராட்டத்தின் பின்னணியில், ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய இந்திய அரசும்- இலங்கையும் ;தமிழர் உரிமைகள் குறித்துச் செய்துகொண்ட "சமாதான ஒப்பந்தத்தை" உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்னும் கோரிக்கை இருந்தது.
இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனமான தமிழர்களது, உரிமைகள்; ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிலாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தித் தனது போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், அஹிம்சையால் சுதந்திரம் பெற்றதாகப் பெருமை பேசும் இந்திய அரசினாலேயே "கண்டுகொள்ளப் படாமல்" உயிர் இழக்க நேர்ந்தது.
அதனை அடுத்து இரண்டாவதாக எமது மனக் கண்களில் நிழலாடுவது, தமிழகத்தின் முதல்வர் "கலைஞர்" நிகழ்த்திய ஐந்து மணிநேர "மெரீனாக்" கடற்கரைப் போராட்டம்.
காற்றோட்டம் நிறைந்த கடற்கரையிலேயே, குளிரூட்டிகள் சகிதம் "உலகப் புகழ்"மிக்க போராட்டத்தை நடாத்தியதன் மூலம் அவர் "முள்ளிவாய்க்கால் படு கொலைகளை" தடுத்து நிறுத்த முடிந்ததா ? என்பது இன்றுவரை "மில்லியன் டாலர்" கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.
இப்போது மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது, இலங்கை அமைச்சர் ஒருவரின் "போராட்டம்".
சென்ற வருடம், நிகழ்ந்துவிட்ட மனிதப் படுகொலைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதன் உண்மை நிலையினை உலகிற்குத் தெரிவிப்பதற்கென, ஐ.நா வின் தலைமைத்துவத்தால் அனுப்பிவைக்கப் படுவதுதான் இந்த மூவர் குழு.
இதனைக் கலைக்க வேண்டும், இல்லையேல் " சாகும்வரை எனது போராட்டம் தொடரும், நான் இறந்து விட்டால் சிங்களத்தின் மைந்தர்கள் இதனைத் தொடர்வார்கள்" என்று சூளுரைத்துவிட்டுக் களத்தில் குதித்திருக்கிறார் விமல் வீரவன்ச.
இந்த மூவரின் "போராட்டங்க"ளும் ஈழத் தமிழர்கள் தொடர்பானவை என்பதைத் தவிர, அவர்களது குறிக்கோள்கள் வேறுவேறானவையே!
திலீபன் ஓர் "ஆயுதப் போராளி"யாக இருந்தும்; அண்டை நாடொன்று தமிழருக்குச் சில உரிமைகளையாதல் பெற்றுத்தரும் பொருட்டுச் செய்து கொண்ட ஒப்பந்தததைக் காலம் தாழ்த்தாது நிறைவேற்றுங்கள் என்னும் வேண்டுகோளினை முன்வைத்து அதன் மூலம் உயிர் நீத்தார்.
ஓர் இனத்தின் அவல நிலைக்குப் பரிகாரம் வேண்டிப் போராடியவர் அவர். அதன் பின்னணியில் "பதவி ஆசையோ". "நடிப்போ" இருக்கவில்லை. ஆகையினால்தான் தனது "போராட்டத்தில்" உறுதியோடிருந்து, அதனை உதாசீனம் செய்த "அரசுகளின் நடவடிக்கைகளால்" தனதுயிரையும் இழக்க நேர்ந்தது.
அவர் "புலி"யாகவோ அல்லது "சிங்க"மாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்.ஆனால் அவரது கோரிக்கையில் நியாயம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.
"கலைஞ"ரின் "உண்ணா விரதப் போராட்டம்" எத்தகையது என்பதை இங்கு விபரமாக எழுதவேண்டியதில்லை. அண்மையில், இலங்கை அரசினால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் மீது திடீர்ப் "பாசம்" கொண்டு மீண்டும் "கடிதம்" எழுத ஆரம்பித்ததில் மறைந்திருக்கும் "2011" தமிழகத் தேர்தல் குறித்த அவரது "காய் நகர்த்தல்களை" புரிந்துகொண்டவர்களுக்கு, அன்றைய அவரது "மெரீனா ஒத்திகை"பற்றிய பின்னணியையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
"வீர வன்ச" வின் போராடம் சற்று விசித்திரமானது !
இலங்கை உட்பட உலக நாடுகள் பலவும் உறுப்பினர்களாக இருக்கும், ஐ.நாவுக்கு, அண்மைக்காலங்களில் கிடைத்த, "2009 ம் ஆண்டின் தமிழினப் படு கொலைகள்" பற்றிய உண்மைகளை அறியும் நிர்ப்பந்தம் அல்லது கடமை உருவாகியிருந்தது.
அதனை நிறைவேற்றுவதற்காக ஐ.நாவின் தலைமை மூவரை இலங்கைக்கு அனுப்பத் திட்டமிட்டது.
ஏற்கனவே எமது நாட்டில் அதனை விசாரிக்க ஆணைக்குழு அமைத்துவிட்டோம், இனி எதற்கு ஐ.நாவில் விசாரணை என்று "குதிக்கிறது" இலங்கை.
அதன் நிலையை ஆதரித்துப் "போராட்டத்தில்" இறங்கியிருக்கிறார் வீரவன்ச.
ஐ,நா வின் போக்கினை ரஷ்யா போன்றவை வெளிப்படையாகவே கண்டிக்கின்றன. ஒரு காலத்தில் "இரும்புத்திரை நாடு" என்று பெயர் பெற்றிருந்த ரஷ்யா , செச்சென்யாவால் "தலை வலி"யை அனுபவிக்கும் ரஷ்யா ஐ.நாவைக் கண்டிக்காது விட்டிருந்தால்தான் ஆச்சரியம்!
"முக்காடு" போட்டுக் கொண்டிருக்கும் இந்தியா இன்னும் வாய் திறக்கவில்லை.
வீரவன்ச எதற்காகப் பயப்படுகிறார் என்பதை அவரது பேச்சே எதிரொலிக்கிறது!
இலங்கையின் தேசீயப் பத்திரிகைகளுள் ஒன்றான "வீர கேசரி"யின் சென்ற வெள்ளிக்கிழமை [09-07-2010] முகப்புச் செய்தியில் வீரவன்சவின் "வீர வசனங்கள்" பதிவாகியிருக்கின்றன.
“வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளைக் கொன்றதாகக் கூறி இலங்கை இராணுவத்தையும் அரச தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தூக்கிலிட பான் கீ மூனின் நிபுணர் குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சிலரது ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது…………………………………………………………
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐ.நா வின் நிபுணர் குழுவை குறைவாக கணிப்பிடக் கூடாது. ஏனெனில், இந் நிபுணர் குழு எதிர்வரும் நாட்களில் விசாரணைக் குழுவாக மாறலாம். பின்பு பல விசாரணைகளை நடத்தி பொய் குற்றச் சாட்டுகளை நிரூபித்து எமது நாட்டுத் தலைமைத்துவங்களை சர்வதேசம் தூக்கிலிட்டுவிடும்.”
இவ்வாறு பேசியிருக்கிறார் விமல் வீரவன்ச.
இத்தனைக்கும், ஐ.நா; இலங்கையில் தமிழினப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், நம்பியாரையும், மேனனையும் நம்பிக் "கைகட்டி நின்ற" ஓர் நிறுவனந்தான்!
இதற்குப் போய் வீரவன்ச இவ்வளவு தூரம் பயப்படுவதுதான் வியப்பாக உள்ளது.
ஒரு வேளை இதுவும் சர்வதேசம் ஆடும் மற்றொரு நாடகமோ ? யார் கண்டது…!
*****************************************************************************************************







1986 நவம்பரில்- அப்போது எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்த சமயத்தில், அம்மாத நடுப்பகுதியில் இந்தியாவில் இடம் பெறவிருந்த ‘சார்க் மா நாட்டில்’ அப்போதைய இலங்கையின் அதிபர் ஜே.ஆர் கலந்து கொள்வதாக இருந்தது. அதன் காரணமாக தமிழ் நாட்டில் தங்கியிருந்த எல்லாத் தமிழ்ப் போராட்ட அணிகளின் வசமிருந்த ஆயுதங்கள் யாவும் களையப்பட்டன. அச் சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரிடமிருந்த தொலைத்தொடர்பு சாதனங்களும் பறிக்கப்பட்டன. அவற்றை மீளப் பெறும் பொருட்டு உண்ணாவிரதமிருந்த செய்தியும் அது தொடர்பாக தொலைத்தொடர்பு சாதனங்கள் மீண்டும் கையளிகப்பட்டதும் நான் அறிந்தவை தாம். அக்காலப் பகுதியில் ஏனைய தமிழ்ப் போராட்டக் குழுக்களைப் போன்றே விடுதலைப் புலிகள் இயக்கமும் கருதப்பட்டு வந்தது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் பின்னரே ‘ஈழத் தமிழரகளின் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் அங்கீகாரம் பெற்ற இயக்கமாக’ அது தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. எனவேதான் அதற்கு முந்திய சம்பவங்களுக்கு இக்கட்டுரையில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மேலும், 1986ல் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம், தமிழர்களது உரிமை சம்பத்தப்பட்டதாக அன்றிப் போராட்ட அணி பற்றிய தாகவே கருதப்பட்டது. இதன் காரணமாகவே திலீபனது உண்ணா நோன்பினைத் தமிழுரிமைப் போரின் முதல் போராட்டமாக குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால், விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த இயக்கம் ஒன்றின் வரலாற்றில் தாங்கள் குறிப்பிட்ட சம்பவம் சேர்த்துக் கொள்ளப்படவேண்டியதே என்பதில் ஐயமில்லை.
எண்பதுகளின் நடுப்பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது தமிழீழத் தேசியத் தலைவரும் சாகும்வரை உண்ணா நோப்புப் போராட்டத்தினை நடாத்தியிருந்தார். ஆனால் உண்ணா நோப்பினை ஆரம்பித்த 48 மணி நேரத்தில் இலக்கு அடையப்பட்டதால் அவர் தனது போராட்டத்திதைக் கைவிட்டிருந்தார்.
அப்போது இலங்கையின் வடக்குக் கிழக்கில் செயற்பட்டுவந்த புலிகளின் தளபதிகளுக்கும் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்த செயலாற்றிய புலிகளின் தலைமைக்கும் இடையிலான தொடர்பாடல்களை நிறுத்தும் வகையில் இந்திய மத்திய அரசாங்கத்தின் உத்தரவின் பெயரில் விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் தமிழ்நாட்டில் வைத்துப் பறிமுதல் செய்யப்பட்டது.
இவை உடனடியாகத் திருப்பத் தரப்படவேண்டும் எனக்கோரியே தலைவர் பிரபாகரன் உண்ணாநோன்பிருந்தார். பின்னர் இந்திய அரசாங்கம் தலைவரது உண்ணாவிரதத்திற்கு அடிபணிந்து அந்த தொலைத்தொடர்பு சாதனங்களை வழங்கியிருந்தது.