கடந்த 5 ஆம் திகதி புதன்கிழமை லண்டனிலிருந்து மலேசியாவுக்கு சென்றிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் சகோதரர் மற்றும் நடேசனின் மகன் ஆகியோரை சந்திப்பதற்காக பத்மநாதன் அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஜீத் இந்தியா என்ற இடத்தில் அமைந்துள்ள ரியூன் விடுதிக்கு சென்றிருந்துபோதே அவர் கடத்தப்பட்டார் என்று தெரியவருகிறது.
தன்னை சந்திக்க வந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்த சமயம் - பிற்பகல் 2 மணியளவில் - அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசுவதற்காக அவர் எழுந்து விடுதியின் ஓடுங்கிய பாதை ஒன்றின் வழியாக வெளியே சென்றிருந்தார். வெளியே சென்ற பத்மநாதனை வெகுநேரமாக காணவில்லை. அதன்பின்னர், பத்மநாதனை சந்திக்க வந்தவர்கள் - அவருடன் மலேசியாவில் சந்திப்பை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்தவர்களை - தொடர்புகொண்டு விடயத்தினை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் பத்மநாதனை தொடர்புகொள்ளமுயற்சித்து, பின்னர் காவல்துறை வட்டாரங்களுடன் தொடர்புகொண்டபோதே அவர் கடத்தப்பட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
புதன்கிழமை மலேசியாவில் வைத்து கடத்தப்பட்ட பத்மநாதன் அவர்கள் தாய்லாந்திற்குகொண்டு செல்லப்பட்டு அங்கிருந்துதான் சிறிலங்காவுக்கு மறுநாள் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை மேலும் தெரிவிக்கையில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் விமானத்தில் கைகளில் விலங்கிடப்பட்டபடி கொண்டுவரப்பட்ட பத்மநாதன், கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து முகம் மூடப்பட்ட நிலையில் கறுப்பு கண்ணாடிகளால் ஜன்னல்கள் உடைய காரில் குற்றப்புலனாய்வு பிரிவின் இரகசிய விசாரணை இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்று தெரிவித்தன. பத்மநாதனுடன் மேலும் இருவர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்கள் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடத்தலில் மலேசிய புலனாய்வுத்துறையின் பங்களிப்பை மறைப்பதற்காகவே தாய்லாந்தில்வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் பத்மநாதன் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டதாக தெரியவருகிறது. பத்மநாதன் அவர்கள் தாய்லாந்து பெண் ஒருவரையே திருமணம் செய்தவராதலால் தாம் அறிவிக்கும் செய்தியை நம்பவைப்பது சுலபம் என்று அரச தரப்பில் திட்டமிடப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால், பத்மநாதன் அவர்களை தமது நாட்டு அதிகாரிகள் எவரும் கைதுசெய்யவில்லை என்று தாய்லாந்து அரசு அடியோடு மறுத்திருக்கிறது.

கடத்தல்:சந்தேகங்கள்
சர்வதேச ரீதியில் தேடப்படும் நபர் என்று பலதரப்புக்களிலும் தெரிவிக்கப்பட்டுவந்தபோதும் தனது பாதுகாப்பு விடயத்தில் இதுவரை காலமும் மிகவும் நிதானமாக இருந்துவந்த பத்மநாதன் எவ்வாறு இவ்வளவு இலகுவாக கடத்தப்பட்டிருக்கிறார் என்ற கேள்வி அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.
அதேவேளை, சந்திப்பு இடம்பெற்ற கோலாலம்பூர் ஜலால் ரொன்கு அப்துல் ரகுமான் வீதியில் அமைந்துள்ள மஜீத் இந்தியா என்படுவது சன நெருக்கடி மிக்க ஒரு சந்தை. சகல தரப்பட்ட மக்களும் எந்நேரமும் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இடம். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை தெரிந்திருந்தும் பத்மநாதன் அவர்கள் அவ்வாறான ஒரு இடத்தை சந்திப்புக்காக ஏன் தெரிவு செய்தார் என்று தெரியவில்லை என்றும் - வழமையாக வெளியே செல்லும்போது இரண்டொருவரை தனது பாதுகாப்பு துணைக்கு அழைத்துச்செல்லும் பத்மநாதன் அன்றைய தினம் தனியாகவே சென்றிருந்தார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

பத்மநாதன் அவர்களின் பணி
பத்மநாதன் அவர்களின் பெயர் யாவராலும் அறியப்படிருந்தபோதும் அவர் மக்கள் முன்தோன்றிய சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. அண்மையில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொண்ட செவ்வி ஊடாகவே பத்மாநாதனை பெரும்பாலானவர்களுக்கு தெரியவந்தது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் பன்னெடுங்காலமாக அந்த அமைப்பின் வெளிநாட்டு நடவடிக்கைகளை செவ்வனே செய்து புலம்பெயர்ந்துவாழும் மக்களையும் போராட்டத்தின் பங்காளிகளாக மாற்றிய பெரும்பணியை பத்மநாதன் அவர்கள் மேற்கொண்டுவந்தார். சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர், தனக்கு தனது பணிகளிலிருந்து ஓய்வு தரும்படி தேசியத்தலைவரிடம் கேட்டு, தனது வேலைகளிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தார். அதற்கு அவரது உடல்நிலையே பிரதான காரணமாக இருந்தது. தினமும் பல மருந்துகளை உட்கொள்ளவேண்டியநிலையில் அவரது உடல்நிலை மிகமோசமான நிலையிலிருந்தபோதும் அவர் தொடர்ந்தும் தாயகப்பணிகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கிவந்தார்.
2006 ஆரம்பமாகி கடந்த வருட இறுதியில் தமிழர் தாயகத்தில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகள் சிறிலங்கா படைகள் வசம் வீழ்ந்தன. அதுவரை தாயகத்திலிருந்து இராஜதந்திர பணிகளையும் முன்னெடுத்துவந்த தேசிய தலைவர், கிளிநொச்சி படையினரின் வசம் வீழ்ந்த பின்னர், தனது கட்டளைகளை தொடர்ந்து எதிர்பாராமல் சரியான முடிவுகளை அவ்வப்போது எடுத்து வெளிவிவகாரப்பணிகளை மேற்கொள்ளவும் புலம்பெயர்ந்துவாழும் மக்களின் பணிகளை ஒருங்கமைக்கவும் தாயகத்துக்கு வெளியே ஒருவரை நியமிப்பதற்கு முடிவு செய்தார். அதற்கு பொருத்தமானவர் பத்மநாதன் என்பது தலைவரது மனதில் எப்போதுமே இருந்துவந்த யோசனையாதலால், அது குறித்து அதிகம் சிந்திக்காது பத்மநாதன் அவர்களுடன் தொடர்புகொண்டு விடயத்தை விளக்கி பொறுப்புக்களை ஏற்று பணிகளை ஆரம்பிக்கும்படி கூறினார்.
இதனை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் பத்மநாதன் அவர்கள் விடுதலைப்புலிகளின் இராஜதந்திர உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தாயகத்தில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் வெளிநாடுகளில் இராஜதந்திரிகளுடனான பேச்சுக்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு போரை நிறுத்தவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஈற்றில், சிறிலங்கா அரசு விடாப்பிடியாக போரை நடத்தி இறுதிக்கட்டத்தை நெருங்கிய காலப்பகுதியில், பல்லாயிரக்கணக்கான போராளிகள் பாதுகாப்பாக சரணடையும் ஏற்பாட்டை மேற்கொள்ளும்படி வெளிநாடுகளின் ஊடாக சிறிலங்கா அரசிடம் வேண்டுகோள்களை விடுத்து, அக்காலப்பகுதியில் கண்ணிமைக்காத பணியில் ஈடுபட்டிருந்தார். போரில் சிக்கிய மக்களை பாதுகாப்பதற்கு பெரும் முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார்.
போர் முடிவடைந்த பின்னர், புலம்பெயர்ந்து வாழும் மக்களின் சக்தியுடன் புறநிலை தமிழீழ அரசு ஒன்றை உருவாக்கி அதன் பலத்துடன் தாயகத்தில் அல்லல்படும் மக்களுக்கு அவசர உதவிகளை மேற்கொள்ளவேண்டும், சரணடைந்த போராளிகளை பாதுகாப்பாக விடுதலைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற மனிதாபிமான பணிகளையும் -
ஜனநாயக வழிமுறையின் கீழ் தமிழ்மக்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள போராடுவர் என்று அறிவித்து அதற்குரிய சரியான கட்டுமானங்கள் மற்றும் அமைப்பு சார் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் பிரதான பொறுப்புக்களையும் மேற்கொண்டுவந்தார்.
இந்தமாதிரியான ஒரு நிலையில் - தமிழினம் சற்று நிம்மதியாக மூச்சுவிடுவதற்கு தலை நிமிர்த்தியுள்ள இந்த கணத்தில் - பத்மநாதன் அவர்களை சிறிலங்கா கூட்டுச்சதி வலை விரித்து பிடித்திருக்கிறது.
பத்மநாதன் அவர்களின் கைது தொடர்பாக புறநிலை தமிழீழ அரசு தொடர்பான வேலைத்திட்டத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிவந்த ஒருவர் கருத்து கூறுகையில் -"விடுதலைப்புலிகளின் அனைத்து கட்டுமானங்களும் போரின் கொடூரத்தால் சிதைக்கப்பட்ட இன்றைய நிலையில், அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் என்ற ரீதியிலும் போராட்டத்தின் இலட்சியத்தில் ஒன்றுபட்டவர் என்ற வகையிலும் பாரெங்கும் பரந்துவாழும் தமிழர்களை மீண்டும் ஒரு குடையின கீழ் அணிதிரட்டி ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தின் உயிர்ப்பை தொடர்ந்தும் பேணிக்கொள்வதில் பெரும் ஆர்வத்துடன் செயற்பட்டவர் பத்மநாதன்.
"அண்மைக்காலமாக அனைத்து தரப்பிலும் பத்மநாதன் தொடர்பாக பிரமாண்டமான விம்பம் உருவாக்கப்பட்டு அவர் தொடர்பான பல விவாதங்கள் நடைபெற்றன. ஆனால், தாயகத்தில் உள்ள மக்களின் விடிவுக்காக பணியாற்ற வேண்டும் என்ற அயராது பாடுபடும் எளிய மனிதர்தான் பத்மநாதன். அவர் புதுவடிவத்திலான தமிழரின் தற்போதைய போராட்டத்தின் குறியீடு ஆவாரே தவிர, சிறிலங்கா அரசின் இவ்வாறான கைதுகள் எல்லாம் எமது மக்களின் விடிவை நோக்கிய பயணத்தின் பாதையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை" - என்றார்.







இன்னும் இருக்கிறோம் என்பதை உலகம் உணரவேண்டும்.
All Tamils must unite , all over the world
Gopal Canada