மனித குலம் தோன்றியதிலிருந்து பல்வேறுபட்ட பிரச்சினைகள் அழிவுகள் என்பவற்றைச் சந்தித்து வந்த போதிலும் மனிதர்களின் வித்தியாசமானதும் சுவாரசியமானதுமான தேடல்களே வாழ்க்கைளைச் சுவைபட நகர்த்திச் செல்கின்றது. பல புதிய கண்டுபிடிப்புக்களுக்கு வழிகோலும் இந்தத் தேவைகளின் மூலமாகவே மனிதகுலம் பல வளர்ச்சிப் படிகளில் ஏறி வந்துள்ளது. இந்த வகையில் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு ஆசையே மிதக்கும் நகரத்தை (Floating City) உருவாக்குதல்.
அதாவது, இராட்சதக் கப்பலொன்றில் ஒரு நகரத்தை நிர்மாணித்து, அங்கு மக்களைக் குடியேற்றி அந்த நகரத்தையே உலகவலம் வரச்செய்தல் ஆகும்.
பொதுவாக நீர்ப்பரப்பினுள்ளே தூண்களை எழுப்பி அத்தூண்களின் மீது குடியிருப்புக்களை நிர்மாணிக்கும் போது, அக்குடியிருப்புக்களையும் மிதக்கும் நகரம் என்று சொல்வதுண்டு. ஆனால், கப்பலில் நிர்மாணிக்கப்படும் இந்த மிதக்கும் நகரத்தில், ஒரு நகரத்திற்குத் தேவையான அனைத்துக் கட்டுமானங்களும் காணப்படும். நகரின் குடியிருப்பாளர்கள் தமது அன்றாடத் தேவைகளுக்காக நகரைவிட்டு வெளியே வரவேண்டிய தேவையே இருக்காது. அதற்கேற்றாற்போல் இந்த மிதக்கும் நகரம் வர்த்தக மையங்கள், பாடசாலை, வைத்தியசாலை, போக்குவரத்துக் கட்டமைப்புக்கள், விமான நிலையங்கள் என அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.
இந்த மிதக்கும் நகரத்தினை சாதாரண பயணிகள் உல்லாசக் கப்பல்களுடன் ஒப்பிட முடியாது. சாதாரண பயணிகள் உல்லாசக் கப்பல்கள் அளவு, பயணிகள் கொள்ளளவு மற்றும் பயன்பாடு என்பவற்றில், இந்த மிதக்கும் நகரத்திலிருந்து பாரியளவில் மாறுப்ட்டுக் காணப்படுகின்றன.
ஏறக்குறைய 1300 மீற்றர் நீளமும் 200 மீற்றர் அகலமும் கொண்ட இந்த மிதக்கும் நகரம் கடலின் மேற்பரப்பிலிருந்து 100 மீற்றர் அளவுக்கு உயரத்தையும் கொண்டது. அதாவது, கிட்டத்தட்ட 25 மாடிகள் உயரம் கொண்டது. இந்த மிதக்கும் நகரக் கப்பலின் அடிப்பாகத்தின் உட்பகுதி 520 காற்றிறுக்க வளியறைகளாகப் (airtight cells) பிரிக்கப்பட்டு தடித்த உருக்கினால் காப்பிடப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் நகரக் கப்பலின் உந்துசக்தி, ஒவ்வொன்றும் 3700 குதிரைவலு சக்தியை வளங்கவல்ல100 டீசல் இயந்திரங்களின் மூலம் வழங்கப்படுகின்றது. இவ்வியந்திரங்கள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 1 மில்லியன் டொலர்கள் பொறுமதியானவை எனக் கணிப்பிடப்பட்டுள்ளன.
இந்த மிதக்கும் நகரம் ஏறக்குறைய 60000 குடியிருப்பாளர்களுக்குரிய 17000 குடிமனைகளைக் கொண்டிருக்கும். கப்பல் சிப்பந்திகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுகாக கல்வி மற்றும் ஏனைய வசதிகள் கப்பலிலேயே வழங்கப்படும். கப்பலின் குடியிருப்பாளர்கள் கப்பல் நகர நிர்வாகத்திற்கென தனியான வரிகள் (taxes) எதுவும் கட்டவேண்டியிராது என்ற போதிலும், அவர்கள் தமது சொந்த நாட்டில் கட்டும் வரிகளைத் தொடர்ந்து கட்ட வேண்டும்.
இந்தக் கப்பலில் உணவு விடுதிகள், திரையரங்குகள், களியாட்ட விடுதிகள் என அனைத்து வகையான
பொழுதுபோக்கு அம்சங்களும் காணப்படுவதுடன் ஒவ்வொரு குடியிருப்பும் செய்மதித் தொலைக்காட்சி வசதியினையும் இணைய வசதியினையும் கொண்டிருக்கும். அவைதவிர, இந்த நகரக் கப்பல் தனியானதொரு பாதுகாப்பு சேவையினையும் (security service) கொண்டிருப்பதுடன் நவீன வசதிகளுடன்கூடிய கண்காணிப்பு கருவிகளையும் கொண்டிருக்கும்.
அத்துடக் கப்பலின் அடிப்பகுதியில், கழிவுகளை மீளுருவாக்கம் செய்யும் ஒரு தொழிற்கூடத்தினையும் கொண்டிருக்கும். இத்தொழிற்கூடத்தில், கழிவுப்பொருட்களிலிருந்து மின்னுற்பத்தி செய்தல் மற்றும் பொரும்களை மீள்சுழற்சி செய்தல் போன்ற தொழிற்பாடுகள் இடம்பெறும்.
இவ்வாறானதொரு கப்பலின் ஒவ்வொரு செயற்பாடுமே பெரும் பொருட்செலவை ஏற்படுத்தவல்லன. எனவே, இவ்வாறான குடியிருப்புக்கள் பெரும் கோடீஸ்வரர்களுக்கே பொருத்தமானவையாகக் காணப்படும். பெருந்தொகைப் பண முதலீட்டில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான திட்டங்கள் நிச்சயமாக சாதாரண மக்களுக்கு வாழ்நாள் கனவே. ஆம், நிஜத்தில் அவர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாத கனவு.






