இன்றைய உலகில் ஒருவரை ஒருவர் சந்திக்கையில் கைகுலுக்குவது நாகரிகமாகக் கருதப் படுகிறது. நம் அனுபவத்திலேயே நாம் பல விதமான நபர்களுடன் கை குலுக்கியிருப்போம். "இது என்ன பெரிய விஷயம்? அடுத்தவர்கள் கையைப் பிடித்து சில முறை ஆட்டிவிட்டுக் கையை எடுத்துவிட வேண்டும்.
அவ்வளவுதானே? இதைப்பற்றி ஒரு கட்டுரையா" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல் கைகுலுக்குவது அவ்வளவு சுலபமில்லை. நீங்கள் கைகுலுக்கும் விதத்தை வைத்தே உங்களைப் பற்றி எடை போட்டுவிடலாமாம். அடுத்த முறை நீங்கள் பிறருடன் கைகுலுக்க நேர்கையில் இந்தக் குறிப்புகளை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.
கையை நீட்டும் விதம்.
பொதுவாக கைகுலுக்க கையை நீட்டுகையில், உங்கள் கைசெங்குத்தாக இருக்கும்படி நீட்டவும். இதுவே வியாபார நிமித்தமான கைகுலுக்கலுக்கு ஏற்றது. நீங்களும் நானும் சமம் என்ற பொருளைத்தருவதாம் இது.
நீங்கள் சேவை நிறுவனம் அல்லது விற்பனைப் பிரதிநிதியாக இருக்கும்பட்சத்தில் உங்கள் வாடிக்கையாளர்களிடம் கைகுலுக்க உங்கள் கையை நீட்டும்பொழுது, உங்கள் கட்டைவிரலை இலேசாகக் சாய்த்து உங்கள் உள்ளங்கை 45 டிகிரி சாய்வாக வானத்தைப் பார்த்ததுபோல் இருக்கவேண்டும். இது நீங்கள் பிறரது சேவையை முக்கியமாகக் கருதுபவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்துமாம். பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர் என்பதைக் காட்டக் கூடியது எனக் கருதப் படுகிறது.
உங்கள் உள்ளங்கை தரையைப்பார்த்தவண்ணம் இருக்கும்படி கைகுலுக்குவது, நீங்கள் பிறரை அடக்கியாள நினைப்பவர் என்பதற்கு அறிகுறியாகும். இது கண்டிப்பாகத் தவிர்க்கப் படவேண்டியது.
உள்ளங்கை முழுவதும் வானம் பார்த்து இருப்பதும் சிறப்பானது இல்லை. நீங்கள் தாழ்ந்து போவதைக் குறிக்கலாம். ஆனாலும் சிலர், இது பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தம் கொடுப்பது என்று இந்த விதமான கை நீட்டலைக் கருதுகின்றனர்.
குலுக்கும் விதம்:
கையைக்குலுக்குவதிலும் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு பொருளைத் தரவல்லவை.
1. சிலர் கையை அழுத்தப் பிடித்து, எலும்புகள் நொறுங்கிவிடுவதைப்போல் இறுக்கிக் குலுக்குவார்கள். இவர்கள் தமது தனது அதிகாரம் அல்லது வலிமையை உணர்த்த விரும்புபவர்கள், (Authoritative) என்ற வகையைச் சார்ந்தவர்கள். இது தன்னம்பிக்கையைக் காட்டக்கூடியது என்றாலும், பிறரை அச்சுறுத்துவது இவர்கள் நோக்கம் என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர். இதை "Bone Crusher" என வகைப்படுத்துகின்றனர்.
2. 'செத்த மீன்' என்ற ஒருவகை கைகுலுக்குவதில் உள்ளது. மிகவும் பலவீனமாக எதிராளியின் கையைப் பிடிப்பது, அவர் குலுக்கினால் குலுக்கட்டும் என்ற மேம்போக்காக பெயருக்குக் கையைப் பிடித்துக்கொள்வது, எந்த வித உணர்ச்சியுமின்றி ஒருவர் கையைப் பிடிப்பது இவை இவ்வகையில் அடங்கும். இது கைகுலுக்குபவரின் ஆர்வமின்மை, கவனமின்மை அல்லது பொதுவாக யாரிடமும் பழக விரும்பாதவர் என்ற அபிப்பிராயத்தை உண்டாக்குவது இவ்வகைக் கைகுலுக்கல்.
3. சிலர் உங்கள் கையைப்பிடித்த வேகத்தில் விலக்கிவிடுவார்கள். இது 'ஏதோ கைகுலுக்குவது என் கடமை, நான் குலுக்குவிட்டேன். மற்றபடி உங்களைச் சந்திப்பதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை' என்ற அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய கைகுலுக்கல் வகை. உங்களிடம் பிறர் இப்படி நடந்துகொண்டால், அவரிடம் கூடியவரை எந்த விதமான உதவியையும் கேட்காமல் இருப்பது நல்லது.
4. கைகுலுக்குகையில் ஒருவர் மற்றவரைத் தன்னை நோக்கி இழுத்தால், அல்லது கைகளை வேறு திசையில் திருப்பினால், பிறரைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் என்று கொள்ளலாம். இவர்களிடம் எதாவது காரியம் ஆக வேண்டுமெனில், பொறுமையாக அவர்கள் போக்கிலேயே பேச்சுக்கொடுக்கவேண்டும். நீங்கள் பேசுவதை விட, அவர்கள் பேசுவதை கவனிப்பது முக்கியம். ஏதாவது உங்களுக்கும் அவருக்குமான பொதுவான ஆர்வம், இலக்கு இருக்கிறதா என்று தெரிந்துகொண்டு, அதைப் பயன்படுத்திதான் அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டுவர இயலும்.
5. அரசியல்வாதி வகைக் கைகுலுக்கல்: சாதாரணமான கைகுலுக்கல்போலவே தொடங்கி, பின் உங்களது கையின்மேல் தனது அடுத்த கையால் மூடுவதுபோல் பிடிப்பது, உங்கள் தோள் அல்லது முன்கையைப் பிடிப்பது, இவை பொதுவாக உங்கள் மீது காட்டும் கரிசனத்தைத் தெரிவிக்கிறது. இது பொதுவாக அரசியல்வாதிகள் பின்பற்றும் பழக்கமாகும். ஆனால், நீண்ட நாள் நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களிடம்தான் இந்தக் கைகுலுக்கல் இருக்கவேண்டும். புதிதாக அறிமுகம் ஆகின்றவர்களுடன் இந்த வகைக் கைகுலுக்கலை மேற்கொண்டால் அது போலித்தனமானது என்று கருதப்படுகிறது. நீங்கள் உண்மையிலேயே அடுத்தவர் மீது அக்கறை காட்டினாலும், பிறர் உங்களைப் போலிவேடம் போடுகிறவர் என்று கருத வாய்ப்பிருப்பதால் இதைப் புதியவர்களிடம் அல்லது வியாபார நிமித்தமாகத் தொடர்பு கொள்ளுபவர்களிடம் தவிர்க்கவும்.
6. சிலருடன் கைகுலுக்கும்பொழுது கவனித்திருப்பீர்கள். உங்களது கையை முழுவதும் பிடிக்காமல் விரல்நுனியை மட்டும் பிடித்துக்குலுக்குவார்கள். இத்தகையவர்கள் பொதுவாக பாதுகாப்பில்லாததுபோல் உணர்பவர்களாகவும், யாரிடம் இருந்தும் பொதுவாக விலகியிருக்க விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். இத்தகையவர்கள் உங்கள் விரல்களை நசுக்குவதுபோல் பிடிப்பார்களானால், தான் வலுவுள்ளவர் என்று காட்டிக்கொள்ள முயலுவதாகவும் (அதாவது தமது பலவீனத்தை மறைக்க விரும்புவதாக) உங்களைப் பயமுறுத்தித் தள்ளி நிறுத்த விரும்புவதாகவும் பொருள் கொள்ளலாம். இவர்களிடம் தணிந்துபோவதுபோல் பேசுவது, இவர்களுக்கு நிறைவைத்தரும். இவர்களிடம் நீங்கள் ஏதாவது சாதிக்கவேண்டுமானால், இவர்கள் சொல்வது எல்லாம் சரிதான் என்பதுபோல் பேசினால் போதுமானது.
7. சிலர் கைகளைக்குலுக்குகையில் முதலில் சாதாரணமாகப் பிடித்துக்கொண்டு, பின் முறுக்கத் தொடங்குவார்கள். இத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நீங்கள் என்ன சொன்னாலும், இவர்கள் 'நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்' என்ற ரீதியில்தான் பேசுவார்கள்.
8. உங்களுடன் கைகுலுக்குகையில் உங்கள் உள்ளங்கையில் தனது உள்ளங்கை படாதவாறு கைகளைக் கிண்ணம் போல் குவித்தவாறு கைகுலுக்குவார்களேயானால், இத்தகையவர்கள் எதையோ மறைக்க விரும்புகிறார்கள் என்று பொருள். இது கூச்சத்தின் காரணமாகவும் இருக்கலாம். இவர்களிடம் பேசுகையில், இத்தகையவர்களுடன் பணி புரிய நேரிடுகையில், இவர்கள் கொடுத்த தகவல்களை சரிபார்த்து, விடுபட்ட தகவல்களைச் சேகரிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
ஆகா....கடைசியில் சரியான முறையில் கைகுலுக்குவது எப்படி என்று சொல்லவில்லையே!! முதலில் கூறியபடி, உள்ளங்கையானது செங்குத்தாக, அல்லது இலேசாக வானத்தைப் பார்க்கும்படி கையை நீட்டவேண்டும். எதிராளியின் உள்ளங்கையில், உங்களது உள்ளங்கையானது பதியும்படி பிடித்துக்கொள்ளவேண்டும். பிடி மிக இலேசாகவும் இல்லாமல், மிகுந்த அழுத்தமாகவும் இல்லாமல் அதே சமயம் திடமாக இருக்கவேண்டும். இரண்டு முதல் மூன்று முறைதான் குலுக்கவேண்டும். கைகளை மிக வேகமாக உருவிக்கொள்ளக் கூடாது. எதிராளி போதும் கையை விடு என்று சொல்லுகின்ற அளவு பிடித்துக்கொள்ளவும் கூடாது, மூன்று விநாடிகள் முதல் நான்கு விநாடிகள் வரை பிடித்துக்கொண்டால் போதுமானது. பெண்களுடன் சந்திப்பு நேருமானால், முதலில் பெண்கள்தான் கையை நீட்டவேண்டும். கைகுலுக்குகையில், கண்களை நேருக்குநேர் சந்திப்பதும், புன்னகை புரிவதும் அவசியம்.
ஏதாவது சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுதோ, உங்கள் கைகள் ஈரமாக இருக்கும்பொழுதோ, நீங்கள் உடல்நலக்குறைவால் (குறிப்பாக ஜலதோஷம், சளி இருமல் முதலியவை) அவதிப்படுகையிலோ கைகுலுக்கலைத் தவிர்த்து, தலையைச் சாய்த்துப் புன்னகைப்பது போதுமானது. அவ்வாறே, எதிரிலிருப்பவர் கைகளில் எதாவது பொருட்களை வைத்திருக்கையில், அல்லது உணவருந்துகையில் உங்கள் கைகளை நீட்டாமல் இருப்பதும் முக்கியம்.
நல்ல துவக்கமே நல்ல முடிவினைத்தரும் என்பது பெரியவர்கள் வாக்கு. சரியான கைகுலுக்கலே சிறப்பான அறிமுகத்திற்கு முதல் வழி.






