இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல் ஆச்சர்யமும், வியப்பும் ஒருங்கே தனது கூட்டுக்குள் அடைக்கலம் புக வைத்து இந்த இயற்கையின் முன்னால் நம் இருப்பின் ரகசியத்தை அறிய ஆவலுடையவனாக மாற்றி புத்துயிர் ஊட்டுகிறது என்றால் அது மிகையாகுமா? அண்டவெளியில் மிதந்தவாரே நம்மையெல்லாம் ஒரு சக பயணியாக இந்தப் பூமி பலப்பல பரிணாம விந்தைகளையும் தன்னிடத்தில் நிகழ்த்தியவாறே எங்கோ அழைத்துச் செல்கிறதே!
நினைக்கும் பொழுதே ஆச்சர்யம் முழுதுமாக என்னை விழுங்கிவிடுகிறது. இந்தப் பூமி நமது சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு சுழல ஆரம்பித்து சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் நகர்ந்துவிட்டதாம்.
தன்னை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தன்னுள் இருக்கும் விசயங்களையும் செதுக்கியவாறு தனது இருப்பை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அப்படியான கால நகர்வில் எப்படி நம்மைப் போல கேள்வி கேட்கும் ஒரு ஜந்துவையும் இந்த ஆச்சர்யப் பூமி உருவாக்கிக் கொண்டது? சற்றே உள் நுழைந்துதான் பார்ப்போமே!
இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழமை வாய்ந்த பாக்டீரியாவிற்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்கிறார்கள். காரணம் இதே பூமியில் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒன்றுமேயற்ற நிலையில் வெறும் கரியமிலவாயுவும், நைட்ரஜனும் மட்டுமே நிரம்பி இருந்த காலத்தில் பாக்டீரியாக்கள்தான் இன்றிருக்கும் பிராணவாயுவை சிருஷ்டிக்க உதவியவர்கள் என்கிறார்கள். கோடானு கோடி வருடங்கள் இடையறாது அளவுக்கு மிஞ்சிய கரியமிலவாயுவை உள்ளிழுத்து, பிராணவாயுவை வெளித்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பாக்டீரியாக்கள், என்னைப் போன்றவர்கள் நாளை வருவார்களென்று அறியாமலேயே!
அப்படியாக காலம் நகர்ந்து செல்கின்ற நிலையில் நிகழ்ந்த சுற்றுப்புறச் சூழல் மாற்றம் மற்றும் தாவர வகைகளைக் கொண்டு பரிணாமம் பல சிக்கலான சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களுக்கிடையே, பல ஜீவ ராசிகளை சிருஷ்டிக்க உதவியவாறே சுற்றியிருக்கிறது இப்பூமி. அந்த சிருஷ்டிப்பின் ஒரு கிளையில் சுமார் 265 மில்லியன் வருடங்களுக்கு முன் (பெர்மியன் யுகக் கால இறுதியில்) நாம் உருவாவதற்கான முதல் பாலூட்டியும் உருவாகியிருக்கிறது. அதே காலகட்டம்தான் டைனோசார்கள் பூமியை உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்த காலகட்டமாகவும் இருந்திருக்கிறது. பல்கிப் பெருகிப்போன பல வகை டைனோசர்களாக, அதனில் பறப்பன வகையையும் உள்ளடக்கியவாறு செழித்து வாழ்ந்திருக்கிறது இப்பூமி.
அதன் ஆளுமை சிறப்பித்திருக்குமளவில் முதலில் தோன்றிய பாலூட்டிகள் தம்முருவத்தைச் சுருக்கி, சிறியளவில் (2-3 செ.மீட்டரளவே) வாழ்ந்துள்ளன. இவை கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு, இரவினில் மட்டுமே வெளிக்கிளம்பும் உயிரினங்களாக பூமிப் பொந்துகளில் அடைக்கலம் கொண்டு அக் காலகட்டத்தை நகர்த்தியிருக்கின்றன.
ஜுராசிக் காலகட்டத்தின் இறுதி நிலை அதாவது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை வெறும் 10 வகையான பாலூட்டி இனங்களே இருந்ததாக அறியப்படுகிறது. இந்நிலையில்தான் இயற்கையின் சீற்றத்தால் “K-T பேரழிவு” என்றழைக்கப்படும் மாபெரும் பூமி உயிரினத் துடைத்தெடுப்பு நடந்தேறியது. அதனால் கிட்டத்தட்ட எல்லா வகை டைனோசர்களும் - பறப்பன தவிர்த்து - அழிந்தொழிந்திருக்கின்றன. அந்நேரத்தில் இருந்த பத்து வகைப் பாலூட்டிகளில் ஐந்து பாலூட்டிவகைகளும் அழிந்துவிட்டன.
இப்பொழுது பூமி வீடு இரண்டாம் வகை உயிரின ஆளுமைக்குத் தயாராக இருந்த கால கட்டம். இந்தப் பேரவிழிற்கு பின்பு, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 78 குடும்ப வகைகளாக அனைத்து வகைப் பாலூட்டி இனங்களும் சீற்றம் கொண்டு பல்கிப் பெருகத் தொடங்கிவிட்டது.
அதிலும் குறிப்பாக பேலியோசீன் காலகட்டத்தில் (65-58 மில்லியன்) ஓரளவிற்கு வால்/வாலில்லாக் குரங்குகள் உருவாவதற்கான மூதாதை வகைக் குரங்கினங்களும் தோன்றத் தொடங்கிவிட்டன. இருப்பினும் இது முழுமையை அடைந்தது யியொசீன் காலகட்டமான 58-40 மில்லியன் வருடங்களுக்கு இடையேதான். அந்தக் காலகட்டதிலேயே இன்று காணப்படும் ஏறக்குறைய 4260 வகையான பாலூட்டிகளின் மூதாதை இனங்களும் செதுக்கப்பட்டு விட்டன.
ஆனால், ஏழு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய மூதாதையர் (வால்/வாலற்றக் குரங்கு)ஆட்கள் நான்கு கால்களாலும் நடக்கும் நிலையிலேயேதான் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகே இரண்டு கால்களாலும் எழுந்து நின்று நடக்கும் வாலற்ற குரங்கினமாக முன்னேற்றமடைந்திருக்கிறது.
இந்நிலையில் எப்பொழுதும் போலவே காலச் சக்கரம் சுழன்று பூமி தனது பயணத்தில் புதிது புதிதாக விசயங்களை நிகழ்த்திக்கொண்டே வரும் நிலையில் மூன்று மில்லியன் வருடங்களுக்குப் பின்பாகவே மனிதனை ஒட்டிய நம் மூதாதையர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடத்தே இருந்து இப்போதுதான் ஒரு மில்லியன் வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் நாம் செதுக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைந்த நிலையில் உள்ளோம். நாம் மட்டுமே இருப்போமென்ற டைனோசார்களின் உண்டு இல்லை நிலையை ஏற்கெனவே எட்ட வைத்ததைப் போன்றே இந்தக் குறுகிய கால கட்டத்தில் நம்மையும் முன்னேற வைத்து பரிணாம ஏணியின் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறது இந்த ஆச்சரியப் பூமி என்ற இயற்கை!






